சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரம் பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.இதன் விளைவாக அயலவர்களான கல்முனை வாழ் மக்களும் சாய்ந்தமருது வாழ் மக்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாகப் பார்க்கும் நிலை உருவாகிக்கொண்டு வருகிறது.இந்த நிலை நீடிப்பின் முஸ்லிம் சமூகத்தின் பிரதேச ரீதியான ஒற்றுமை மிகப்பெரிய கேள்விக்கு உள்ளாகும்.அத்தோடு அந்த வெந்தணலில் குளிர்காய பல சக்திகள் முயற்சித்துக் கொண்டுமிருக்கின்றன.இலகுவாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை தங்களின் குறுகிய அரசியல் லாபத்திற்காக மிகப்பெரிய பிரச்சினையாக உருவாக்கிய முழுப்பொறுப்பும் நாம் தெரிவுசெய்த அரசியல்வாதிகளையே சாரும்.
சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேச சபை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் பலர் உடன்பட்டுக்கொண்டாலும், கொடுக்கப்படவேண்டிய பிரதேச சபை எவ்வாறு கொடுக்கப்படவேண்டும் என்பதில் கல்முனை மக்களும் சாய்ந்தமருது மக்களும் கருத்து வேறுபட்டு நிற்கிறார்கள்.
1987ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த எல்லைகளுடன் கல்முனை மாநகர சபையானது கரைவாகு வடக்கு(மருதமுனைப் பிரதேசம்) ,கல்முனை பட்டின சபை,கரவாகு மேற்கு (நற்பிட்டி முனையை உள்ளடக்கிய பிரதேசம்),கரைவாகு தெற்கு(சாய்ந்தமருதுப் பிரதேசம்) என்று நான்காகப் பிரிக்கப்படவேண்டும் என்று கல்முனை வாழ் மக்களும்,
கல்முனை மா நகர சபையை நான்காகப் பிரிப்பது சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் எனவே கல்முனை மா நகர சபையானது சாய்ந்தமருது,கல்முனை என்று இரண்டாகப் பிரிக்கப்படவேண்டும் என்று சாய்ந்தமருது வாழ் மக்களும் கருத்து வேறுபட்டு நிற்கின்றனர்.
ஒரு சிவில் அமைப்பு என்ற ரீதியில் குரல்கள் இயக்கம் மேற்சொன்ன இரண்டு முன் மொழிவுகளில் எது ‘அனைத்து மக்களின் சமுக நலனுக்கும்’ மிகவும் உகந்தது என்ற தொனிப்பொருளில் ஒரு சுயாதீனமான ஆய்வினை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது.
மேற்சொன்ன இரண்டு முன்மொழிவுகளில் இரண்டு தரப்பாரின் வாதப் பிரதிவாதங்களை கேட்டறிந்து அந்தத் தரவுகளை விஞ்ஞான ரீதியான ஆய்வுக்குட்படுத்தி எந்தப் பிரிப்பு அனைத்து மக்களின் நலனுக்கும் உகந்தது என்ற அடிப்படையில் ஒரு அறிக்கையை குரல்கள் அமைப்பு வெளியிடத் தயாராகிறது. அதனை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் கையளிக்க இருக்கிறது.
இது மிக அவசரமாகச் செய்து முடிக்கப்படவேண்டிய காரியம் என்பதால் தங்கள் கருத்துக்களைக் கூற விரும்பும் சகோதரர்கள் இப்பதிவின் கீழ் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.அத்தோடு இது சம்பந்தமாக கள ஆய்வில் ஈடுபடவிருக்கும் குரல்கள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து கருத்துகளை முன்வைக்க விரும்பும் சகோதரர்கள் எங்களை உட்பெட்டியினூடாக தொடர்பு கொள்ளலாம்.இது சம்பந்தமாக ஆவணங்களை அனுப்ப விரும்புபவர்கள் civil societysl2017@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாக எம்மைத் தொடர்புகொள்ளலாம்.
no replies